It

செவ்வாய், 27 அக்டோபர், 2015

சிங்களவர்களை ஆரம்பத்தில் சந்தித்திருந்தால் நான் எல்.ரீ.ரீ.யில் இணைந்திருக்க மாட்டேன் – எனக்கூறிய தமிழினி


இறுதிப் போரில் தப்பி, வாழ்க்கைப் போரில் தோற்ற புலித் தலைவியின் கதை


தமிழினி. அந்தப் பெயர் நாட்டு மக்களின் மனங்களிலிருந்து மறைந்து ஆறு ஆண்டுகளாகி விட்டன. என்றாலும், எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு முல்லி வாய்க்காலில் மறைந்து போவதற்கு முன்னர், தமிழினியின் பெயர் தெற்கிற்கும் வடக்கிற்கும் நன்கு பரிச்சயமானது. எல்.ரீ.ரீ. அமைப்பின் சக்திமிக்க பெருவிருட்சமாக தமிழினி இருந்தார் என்பதுதான் அதற்குக் காரணம்.
2009 மே மாதம் அவர், இராணுவத்தினரிடம் சரணடையும்போது எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் பெண்கள் அரசியல் பிரிவின் தலைவியாக தமிழினி இருந்தார். 

எல்.ரீ.ரீ.ஈ மூலம் இணைத்துக்கொள்ளப்பட்ட யுவதிகளுக்கும், பாடசாலை மாணாக்கருக்கும் ஈழத்தின் கதையை சுவைபடச் சொன்னவர் தமிழினி.


அனைவர் மத்தியிலும் தமிழினி என்ற பெயர் பிரபல்யம் பெற்றாலும் கூட, அவரது உண்மையான பெயர் அதுவல்ல. அந்தப் பெயர் எல்.ரீ.ரீ.ஈ. அவருக்குச் சூட்டிய பெயர். தமிழினியின் இயற்பெயர் சிவகாமி சிவசுப்ரமணியம் என்பதே. அவர் சென்ற 18 ஆம் திகதி காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 43. தமிழினி 1991 ஆம் ஆண்டில்தான் எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பில் இணைந்தார். ஆயுதப் பயிற்சிபெற்ற தமிழினி எல்.ரீ.ரீ.ஈ.யின் வீராங்கனையாக களத்தில் இறங்கிப் பல போர்களில் முனைப்புடன் கலந்துகொண்டார். அதனால் அவருக்கு எல்.ரீ.ரீ.ஈ.யின் லுதினன் கர்னல் பதவிவரை உயர முடிந்தது. 2001 ஆம் ஆண்டு எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பின் பெண்கள் அரசியல் பிரிவின் தலைவியாக அவர் நியமிக்கப்பட்டார். எஸ்.பீ. தமிழ்ச் செல்வன் அரசியல் பிரிவின் தலைவராக செயற்படுங்கால், பெண்கள் அரசியல் பிரிவின் தலைவியாக தமிழினியே செயற்பட்டார். 

தமிழ்ச் செல்வன் வான்வழித் தாக்குதலில் இறந்ததும் அவருடைய இடத்திற்கு நியமிக்கப்பட்டவர் புலிகளின் காவற்றுறைத் தலைவர் பாலகுமார் நடேஷன். ஆயினும் தமிழினிக்கு பெண்கள் பிரிவின் தலைமைப் பதவி தொடர்ந்து வழங்கப்பட்டது. 


போர் நிறுத்தத்துடன் 2009 மே மாதம் இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழினி 2012 ஆம் ஆண்டு வரை காவலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் நீதிமன்ற பணிப்புரையின் பேரில் ஒரு வருட புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக வ்வுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

புனர்வாழ்வு முகாமில் அமைதியின் இருப்பிடமாய் அவர் காட்சி கொடுத்தார். தமிழினி பல தடவைகள் தபாற்காரர்களைச் சந்தித்தாரே தவிர, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதலளிக்க மறுத்தார். சுருங்கச் சொன்னால் எல்.ரீ.ரீ.ஈ. பற்றிப் பேசுவதை அவர் வெறுத்தார். 2013 ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். 

தமிழினி விடுதலை செய்யப்பட்டபோது, கட்சிகள் பலவற்றிலிருந்தும் தமது கட்சியில் வந்து சேர்ந்துகொள்ளுமாறு அவருக்கு அழைப்பு வந்தது. அவர் கட்சிகளின் அவ்வேண்டுகோளை நிராகரித்தார். கிளிநொச்சி – பரந்தனில் அமைந்துள்ள அவரது வீட்டிற்குச் சென்ற தமிழினி, வெளிச்சத்தில் கசியாத வாழ்வினையே கழித்தார். மகாதேவன் ஜெயகுமாரைத் திருமணம் செய்து யாரும் தெரிந்து கொள்ளாத வண்ணம் அவர் வாழ்ந்து வந்தார். அதற்குக் காரணம் அவர் எல்.ரீ.ரீ.யில் அரசியல் பிரிவில் தலைவியாக இருந்தபோது,  பாடசாலை மாணாக்கியர்களாக இருந்த பல நூற்றுக்கான சின்னஞ் சிறுமிகளை பலாத்காரமாக எல்.ரீ.ரீ.யில் இணைத்துக் கொள்வதற்கு முன்னின்று செயற்பட்டமையே ஆகும். அவ்வாறு சேர்க்கப்பட்டோரில் அதிகமானோர் போரில் இறந்தனர்…. அன்றேல் கடுங்காயத்திற்கு உள்ளாகினர்.

(தொடர்ச்சி நாளை...)

(-தமிழில் : கலைமகன் பைரூஸ்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக